அடுத்தடுத்து பிடிபடும் ஆழ்கடல் பிரளய மீன் Doomsday Fish! உலக ஆபத்துக்கான அறிகுறியா? ஆய்வு முடிவு இதோ
அடுத்தடுத்து பிடிபடும் ஆழ்கடல் பிரளய மீன் Doomsday Fish! உலக ஆபத்துக்கான அறிகுறியா? ஆய்வு முடிவு இதோ
தமிழ்நாட்டில் மற்றும் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் பிடிக்கப்பட்ட 30 அடி நீள ஓர்ஃபிஷ் (Doomsday Fish இதை பிரளய மீன் Pralaya Fish என்றும் அழைக்கிறார்கள்) மீனைக் கண்டதும், இது பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகளுக்கு முன் எச்சரிக்கையாக வரும் மீனாகக் கருதி மக்கள் கவலைப்பட்டனர். இந்த நம்பிக்கை ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உள்ள பழங்கதை மற்றும் நம்பிக்கைகளால் உருவானது.
ஓர்ஃபிஷ் என்பது ஆழ்கடலில் வாழும் நீளமான வெள்ளி நிற மீன். இது பொதுவாக 200 முதல் 1,000 மீட்டர் ஆழத்தில் வாழும். கடல் மேற்பரப்பில் இதைப் பார்க்கும் நிகழ்வுகள் மிகவும் அரிது. எனவேதான் மக்களிடையே இந்த பயம் அதிகரித்தது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாட்டிலுள்ள பழங்கதைகளும் இந்த பயத்தை கூட்டின.
ஜப்பானில் பல நூற்றாண்டுகளாக, ஆழ்கடல் மீன்கள் கடல் மேற்பரப்பில் தோன்றுவது பெரிய பூகம்பங்களுக்கு முன் எச்சரிக்கையாக கருதப்பட்டது. "Ryugu no tsukai" என அழைக்கப்படும் ஓர்ஃபிஷ், கடல் கடவுளின் தூதராகவும், பேரழிவுகளுக்கான முன்னறிவிப்பாகவும் பழங்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரிய பூகம்பத்திற்கு முன் பல ஓர்ஃபிஷ்கள் ஜப்பான் கடற்கரையில் வந்ததால், இந்த நம்பிக்கை மேலும் வலுவடைந்தது.
ஆனால், இதற்கு அறிவியல் காரணங்கள் உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓர்ஃபிஷ் மேற்பரப்பில் தோன்றுவதற்கான காரணங்கள் கடல் வெப்பநிலை மாற்றங்கள், கடல் ஓட்டம் மாறுதல், மாசுபாடு, மீன்களிடையே பரவிய நோய், அல்லது வயது மூப்பு போன்ற இயற்கை காரணங்கள் ஆகும். சில நேரங்களில் ஆழ்கடலில் ஏற்படும் அழுத்த மாற்றங்களும் காரணமாக இருக்கலாம். பேரழிவுகளுக்கு முன்னதாக ஓர்ஃபிஷ் மேற்பரப்பில் தோன்றும் என்ற நம்பிக்கைக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று கடல் உயிரியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2019-ஆம் ஆண்டு வெளியான ஆய்வு
2019-ஆம் ஆண்டு ஜப்பானிய ஆய்வாளர்கள் நடத்திய ஒரு முக்கியமான அறிவியல் ஆய்வு, ஆழ்கடல் மீன்கள் மற்றும் பெரிய பூகம்பங்கள் இடையே நேரடி தொடர்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. Tokai மற்றும் Shizuoka பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, 1928 முதல் 2011 வரை 336 ஆழ்கடல் மீன் தோன்றிய நிகழ்வுகள் மற்றும் 221 பெரிய பூகம்பங்களை ஆய்வு செய்தனர்.
1928 நவம்பர் 26 முதல் 2011 மார்ச் 11 வரை உள்ள 83 ஆண்டுகளுக்கான தரவுகள் சேகரிக்கப்பட்டது. தேசிய நூலகம், பத்திரிகை கட்டுரைகள், இணையத்தில் வெளியான செய்திகள், மற்றும் அக்வேரியங்களின் பதிவுகள் மூலம் ஆழ்கடல் மீன் தோன்றிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டது
ஒவ்வொரு மீன் தோன்றிய நிகழ்வுக்கும், அதனுடன் தொடர்புடைய 100 கிலோமீட்டர் சுற்றளவில் 30 நாட்களுக்குள் பூகம்பம் ஏற்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டது.
ஒருமுறை மட்டும்
இதில், ஒரே ஒரு நிகழ்வில் மட்டுமே பூகம்பம் 30 நாட்களுக்குள் 100 கிலோமீட்டர் சுற்றளவில் ஏற்பட்டது. மீதி அனைத்து நிகழ்வுகளிலும், மீன் தோன்றியதும் பூகம்பம் நடந்ததும் இடையே எந்த நேரடி தொடர்பும் இல்லை. மாபெரும் 7.0 மற்றும் அதற்கு மேல் பூகம்பங்களுக்கு முன் எந்த ஆழ்கடல் மீனும் மேற்பரப்பில் தோன்றிய பதிவும் இல்லை. இந்த ஆய்வு Bulletin of the Seismological Society of America என்ற அறிவியல் இதழில் 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. "பூகம்பங்களை முன்னறிவிப்பதில் இது பயனுள்ள தகவல் அல்ல," என்கிறார் Tokai பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யோஷியாகி ஓரிஹாரா.
அறிவியல் காரணம்
- ஓர்ஃபிஷ் மேற்பரப்பில் தோன்றுவது மிகவும் அரிது.
- இது பேரழிவுக்கான முன்னறிவிப்பு என்று எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
- இயற்கை காரணங்கள் மற்றும் கடல் சூழல் மாற்றங்கள் காரணமாக இது மேற்பரப்பில் வரலாம்.
- மக்கள் நம்பிக்கைகள் மற்றும் பழங்கதைகள் காரணமாக இது "Doomsday Fish" என்று அழைக்கப்படுகிறது.
அறிவியல் ரீதியாக, ஓர்ஃபிஷ் தோன்றுவது இயற்கை நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது; பேரழிவுக்கான எச்சரிக்கை அல்ல.
குறிச்சொற்கள்: